15 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த நியாய விலை கடை பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தின் போது, பொது விநியோகத் திட்டத்திற்காக தனித்துறை உருவாக்கப்பட வேண்டும், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் (TNCSC) எடை தராசுகளை நியாய விலை கடைகளில் உள்ள விற்பனை முனையங்களுடன் இணைத்து அத்தியாவசிய பொருட்களை சரியான எடையில் பொட்டலமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், ஓய்வு பெற்ற நியாய விலை கடை பணியாளர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணியாளர்களுக்கு நேரடி எழுத்தர் (கிளார்க்) பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும், மகளிர் நியாய விலை கடைகளை அரசு நேரடியாக நடத்தி பணியாளர்களுக்கு நிலையான ஊதியம் வழங்க வேண்டும் என்பதையும் கோரினர். பணியாளர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு, பணி நிரந்தரம், பணிச்சுமையை குறைக்கும் வகையில் கூடுதல் பணியாளர்கள் நியமனம், பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்
மாவட்ட செய்தியாளர் கண்ணன்



