Uncategorizedமுதன்மைச் செய்திகள்

2025ல் உலக அளவில் தலைப்பு செய்தியில் இடம்பெற்ற ‘டாப் 15’ இவை தான்!

இந்தாண்டில் (2025) உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்வுகள் பல நடந்தன. மகிழ்ச்சி, அதிர்ச்சி, சோகம், வேதனை என வெவ்வேறு உணர்வுகளை ஏற்படுத்திய இந்த நிகழ்வுகளின் டாப் 15 செய்திகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

1. காட்டுத்தீ (ஜனவரி 15)


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் காட்டுத் தீ, தொடர்ந்து கொழுந்து விட்டு எரிந்தது. புகழ்பெற்ற ஹாலிவுட் ஹில்ஸ் மலைப் பகுதியை காட்டுத் தீ கபளீகரம் செய்தது. இந்த விபத்தில், 1,000 வீடுகள் இரையாயின. இதனால், ஹாலிவுட் நட்சத்திரங்கள் உட்பட, 1.30 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். தி பாலிசேட்ஸ் பகுதியில் 8 பேரும், ஈட்டன் பகுதியில் 17 பேரும் என 25 பேர் உயிரிழந்தனர்.

2. அதிபர் பதவியேற்பு (ஜனவரி 20)

அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தன்னை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிசை அவர் தோற்கடித்து அபார வெற்றி பெற்று வெள்ளை மாளிகை கட்டிலில் அமர்ந்தார்.

3. பஸ் விபத்து (பிப்வரி 26)

தாய்லாந்து நாட்டில் கல்வி சுற்றுலா சென்ற இடத்தில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி, 18 பேர் உயிரிழந்தனர்.

4. பாக் ரயில் கடத்தல் (மார்ச் 11)

பாகிஸ்தானின், பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டாவில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நோக்கி சென்ற கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் பயணியர் ரயிலை பயங்கரவாதிகள் கடத்தினர். தண்டவாளத்தில் வெடிகுண்டை வெடிக்கச் செய்து, ரயிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர்.

5. நாடு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் (மார்ச் 19)

விண்வெளியில் உள்ள ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி மையத்தில் ஒன்பது மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ் (59), மற்றும் புட்ச் வில்மோர்(62), பூமிக்கு திரும்பினர். சுனிதா வில்லியம்ஸின் பூர்விக ஊரான குஜராத்தின் மெஹ்சானாவில் மக்கள் உற்சாகம் அடைந்தனர்.

6. நைஜீரியா வெள்ளம் (மே 31)

மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இந்நாட்டின் நைஜர் மாகாணம் மக்வா நகரில் பெய்த கனமழையால், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

7. தூங்கும் மன்னர் மரணம் (ஜூலை 20)

சவுதி அரேபியாவில் 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த 36 வயதான இளவரசர் அல் வாலீத் பின் காலித் பின் தலால் அல் உயிரிழந்தார்.

8. 605 அடி உயர கோபுரத்தில் தேசியக்கொடி (ஆகஸ்ட் 17)

அமெரிக்காவின் சியாட்டிலில் உள்ள புகழ்பெற்ற 605 அடி உயர ஸ்பேஸ் நீடில் (Space Needle) கோபுரத்தில், 2025ம் ஆண்டு இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக, முதல்முறையாக இந்தியக் கொடி ஏற்றப்பட்டது.

9. தனி நாடு அங்கீகாரம் (செப்டம்பர் 23)

பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக முறையாக அங்கீகரிப்பதாக கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் அறிவித்தன.

10. பிலிபைன்ஸ் புயல் (நவம்பர் 6)

பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை கல்மேகி சூறாவளி புயல் கடுமையாக தாக்கியதில், 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பேரழிவுகளை தொடர்ந்து தேசிய பேரிடராக பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் அறிவித்தார்.

11. ஹாங்காய் தீ விபத்து (நவம்பர் 27)

சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கின், தை போ மாகாணத்தில், வாங் புக் கோர்ட் என்ற மிகப்பெரிய குடியிருப்பு வளாகத்தில் தீ பற்றியதில், 125க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

12. இந்தோனேசியா வெள்ளம் (நவம்பர் 29)

இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 604 பேர் பலியாகினர்.

13. 17 பேருக்கு மரண தண்டனை (டிசம்பர் 2)

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காக, 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

14. இலங்கை வெள்ளம் (டிசம்பர் 2)

டிட்வா புயல் காரணமாக இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலச்சரிவு, வெள்ளம் காரணமாக, 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா மீட்பு படையினர் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி இந்தியா உதவிக்கரம் நீட்டியது.

15. வங்கதேச வன்முறை (டிசம்பர் 20)

வங்கதேசத்தின் பல நகரங்களில் வன்முறைகள் வெடித்தன. மைமென்சிங் பகுதியைச் சேர்ந்த திபு சந்திர தாஸ், 27, என்ற ஹிந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். மேலும், அவருடைய உடலை மரத்தில் கட்டி வைத்து தீ வைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button